பொதுவாக நடுத்தட்டு மக்களும் கீழ்த்தட்டு மக்களும் தங்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் கலை ஆர்வத்தினை பெறுவதற்கோ,அடைவதற்கோ அதிகபடியான ஆர்வம்காட்ட முன் வருவதில்லை. ஆனால் பண்டைய தமிழனின் வாழ்க்கையானது தட்டுக்கள் என்ற வேறுபாடுகள் அற்ற நிலையையே கொண்டிருந்தன . அவன் படைத்த கலைகளும், ஆற்றல் மிகுந்த விளையாடுக்களுமே பொழுது போக்குகளாகவும் கலை ஆர்வங்கள் ஆகவும் பறை சாற்றப்பெற்றன. நவீன உலகமானது ஐரோப்பிய கலாச்சாரங்களும் பண்பாடுமே சாலச்சிறந்தது என்றும், கர்நாடக சங்கீதமே துதிக்கத்தக்கது என்றும் தத்தம் பிம்பங்களை விரிக்கத்துவங்கின . தமிழனின் உணர்வு பொங்கிய ஆற்றல்கள் தலித்திய அடை
யாளங்களாக பார்க்கப்பட்டன. அத்தகைய அழிந்து கொண்டிருக்கும் தமிழனின் பண்பாடு விழுமியங்களினைத் தேடிக்கொண்டிருக்கும் பல இளைஞர்களில் நானும் ஒருவன் சிலம்பம், தப்பாட்டம் (பறை) போன்றவைகளுக்காக நெல்லையில் அலையாத வீதிகள் இல்லை. சொல்லிக்கொடுக்கும் குருநாதர்களை தொழுவத்திலும், நயினார்குளம் சந்தையிலும் கண்டெடுத்தேன், கற்றேன். நேர்த்திகள் யாவும் பரிமாறப்பட்டன. ஆனால் எனது சமுதாயம் கிரிக்கெட் விளையாட்டையும் மேற்கத்திய இசையிடமுமே மயங்கி கிடந்தது. பள்ளி
களும் கல்லூரிகளும் அதையே வழி மொழிந்தன இது ஒரு பக்கம் இருக்க, அமெரிக்க நாட்டில் உள்ள WESLEYAN UNIVERSITY ல் பறை பதிவு செய்யப்பட்டு பட்டதாரி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப் படுகிறது. AARON PAIGE என்ற ஆசிரியரால் ஆசிய நாடுகளின் தொன்மையான இசைக்கருவிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன அவற்றுள் (பறை) தப்பாட்டம் என்ற பெயரிலேயே வழங்கப் படுகிறது. கட்டி காப்பாத்த வேண்டிய நாம் மறந்து கொண்டு இருக்கிறோம் மேலை நாட்டு பல்கலைக்கழகங்கள் அதனை பாடத்திட்டங்களாக மாற்றுகின்றன. ஏன் இத்தகைய நிலை தொலைந்து போன தேடல்களை தேடி அலையும் அவல நிலை மாறுமா?

